மும்பை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்,’ உலகின் ஒரே அறிவியல் மொழி சமஸ்கிரு தம்தான்’ என்றார். இவ்வுரைக்கு புலவர் பா.வீரமணி வண்ணக்கதிரில் ‘பொய்யிலே கால்படி, புரட்டிலே முக்கால்படி’ என்கிற தலைப்பில் மறுப்புக் கட்டுரை எழுதினார். இராஜாராம் மோகன்ராய் உருது, அரபு, பாரசீகம், ஆங்கிலம் தெரிந்த பன்மொழி அறிஞர். பௌத்தம், சமணம், இஸ்லாம், கிருத்தவம், வேதம், உபநிடதங்கள் அறிந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் வங்காளத்தில், கிழக்கிந்தியக் கம்பெனியினர் சமஸ்கிருதம் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கத் திட்டமிட்டபோது கவர்னர் ஜெனரல் ஹாம் ஹெர்ஸட் பிரபுக்கு 11.12.1823 அன்று நீண்ட கடிதம் எழுதினார். ‘சமஸ்கிருதம் இந்நாட்டு மக்களை அறியாமை இருளில் ஆழ்ந்து கிடைக்கச் செய்கிறது. இதுவே பிரிட்டிஷ் சட்டமன்றத்தின் நோக்கமாக இருக்குமானால் சமஸ்கிருதக் கல்வி முறை போதுமானதாகும்’. (ஆதாரம் - இராஜாராம் மோகன்ராய் - சௌமியேந்திரநாத் தாகூர் - 1972 - சாகித்திய அகாதமி). ‘வடமொழி நம்மை தூக்கிடும் தாம்பு - நம் உரிமைதனைக் கடித்தது அப்பாம்பு’ என்கிற பாரதிதாச னின் வரியுடன் அக்கட்டுரையை முடித்திருந்தார். தாம்பு என்பது என்ன? ஊர்ப்பழமை என்கிற நூலில் மௌன.மணிவாசகம், உழவுத் தொழிலை தாம்பு ஓட்டுற வேலை என்கிறார். உழவில் ஒரு வகை தாம்பு. வடமொழி கல்வெட்டுகளில் ‘தாம்பு செய்வித்து’ என்கிற வரி இடம் பெறுகிறது. இங்கு தாம்பு என்பது மாலை சாத்துதல். பாப்லோ அறிவுக்குயில் எழுதிய ‘பிரிகூட்டில் துயிலும் விதைகள்’ என்கிற சிறுகதையில் ஓரிடம், ‘யேங் குட்டிவளுக்குத் தழ தாம்பு ஒடிச்சிப் போடவாச்சும் மணி கொல்லைய விக்காம இருக்க நீயிதான் கண்ணைத் தொறக்கணும்’. இங்கு தாம்பு என்பது தளிரிலை. பத்து பவுன் தாம்பு வடச்சங்கிலி - சொல் வழக்கு. மூலிகைகளைப் பறித்து காயவைத்து அதன் மீது கால்நடைகளைப் பூட்டி பொடியாக்குவதற்கு ‘தாம்பு’ என்று பெயர். மதுரை மாட்டுத்தாவணி, ஒரு காலத்தில் மாட்டுச்சந்தையாக விளங்கிய இடம். சந்தை யில் விற்கப்படும் மாடுகள் கயிற்றுடன் விற்கப்படுவதில்லை. மாடும், மாற்றுக் கயிறும் விற்ப னைக்காக அணி வகுத்திருக்கும் இடம் -மாட்டுத்தாவணி. மாடு + தாம்பு + அணி - மாட்டுத்தாம்பணி - மாட்டுத்தாவணி என்றானது. தாம்பு என்றால் கயிறு. மாட்டுத்தாவ டியே மாட்டுத்தாவணி என்றானது என்பாரும் உண்டு. கரும்பு உற்பத்தி நவீன தொழிற்நுட்பத்தில் இச்சொல் இடம்பெற்றுள்ளது. கரும்பு மக சூல், கரும்புச்சாறின் தரம், கரும்பின் வயது, மண் மற்றும் நீர்பாசனம், மறுதாம்புத் திறன், நோய் எதிர்ப்புச் சக்தி. இவை கரும்புடன் தொடர்புடைய சொற்கள். இங்கு தாம்பு என்பது முளைத்தல். பொருள்கோள் இலக்கணத்தில் தாப்பிசை பொருள்கோள் என்றொரு வகை உண்டு. உதாரணம், உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண/ அண்ணாத்தல் செய்யாது அளறு. இக்குறளில் ‘ஊன்’ என்கிற சொல் ஊஞ்சல் போல முன்னும் பின்னும் சென்று பொருள் தருகிறது. தாப்பிசை - தாம்பு+ இசை. இங்கு தாம்பு என்பது ஊஞ்சல். நாலாயிர திவ்யப் பிரபந்தம் : கண்ணன் நெய்த்திருடாமல் இருக்க யசோதைப் பிராட்டி கண்ணனை ஒரு கயிறு எடுத்து கட்டிப்போடுகிறாள். கண்ணன் அக்கயிறை நுண் துண்டாக வெட்டிப்போடுகிறான். யசோதை துண்டானக் கயிறை எடுத்து முடிந்து அவனை மறுபடியும் கட்டிப்போடுகிறாள். இதை ‘ கண்ணி நுண் சிறுதாம்பினால் ‘ எனப் பாடுகிறார் மதுரகவியாழ்வார். இங்கு தாம்பு என்பது கட்டும் கயிறு. மஞ்சாடி மரம் என்கிற யானைக்குன்றுமணிக்கு ‘தாம்புலோவல்லி’ என்றொரு பெயருண்டு. ‘தாம்புந்தோண்டியும்’ கயிறும் தோண்டியுமாக - ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. தாம்புந்தோண்டியுமாகயிழுத்தல் - மூச்சு வாங்குவதன் உவமை. சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் - உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் (முல்லைப்பாட்டு). பால் கறக்கும் ஆய்மகள் கன்றுக்குட்டியை ஒரு சிறு கயிற்றால் முடிந்து வைத்திருந்தாள். பூந்தரளம்/ மா தாம்பு அற்றென்ன/ மழைக் கண்ணீர் ஆலி உக (கம்பராமாயணம்). அதாவது, மிதிலைப் பெண்கள் சிந்தும் கண்ணீர், பெருங்கயிறு அறுந்து முத்துகள் சிந்துவதைப் போன்றிருந்தது. தாம்பு - வடம் (சூடாமணி), தாம்பு - கயிறு. தாம்புக்கயிறு (பிங்கல). தேவநேயம் என்கிற நூலில் பாவாணர், தாம்பு - தாமன், தாம்பணி - தாமணீ. தாம்பணி - தாம்பு+அணி = மாடுகளை வரிசையாகப் பிணைக்கும் கயிறு என்கிறார். கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து (கலித்தொகை) இதிலிருந்து தாம்பு என்பதற்கு மணி, ஊஞ்சல், மாலை, சரம் , உழவு, தளிர் எனப் பலப் பொருளிருந்தாலும் கயிறு என்கிற பொருளில் பேரளவு பயன்படுத்தப்படுகிறது.